Wednesday 20 July 2016

சத்துக்கள் நிறைந்த 'வாழைக்கிழங்கு’

'வாழைக்கிழங்கு’... நம்மில் பெரும்பாலோர் இதைக் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம்.


வாழைமரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் இந்தக் கிழங்கு, காய்கறிச் சந்தைகளில் கிடைக்கும். கூட்டு, பொரியல், அவியல், கிழங்கு மசாலா என எதுவும் இதில் சமைக்கலாம். ஏராளமான சத்துக்கள் நிறைந்தது. இது ஒரு மருந்தும்கூட. ஆனால், மருந்தாகப் பயன்படுத்த வாழைக்கிழங்கு மட்டும் போதாது. அந்தக் கிழங்கு வாழைமரத்திலேயே இருக்க வேண்டும். வாழைமரத்தின் அடிப்பகுதியில் உள்ள கிழங்கில் சிறிய துளையிட வேண்டும். அந்தத் துளையின் அடியில் ஒரு கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் கொஞ்சம் சீரகத்தைப் போட்டு துணியால் மூடி வைத்துவிட வேண்டும். காலையில் பார்த்தால் கிழங்கில் இருந்து சொட்டிய நீர் பாத்திரத்தில் சேகரமாகியிருக்கும். சீரகம் கலந்த அந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், சிறுநீரகக் கல் பிரச்னை வெகுவாகக் குறையும்; ரத்தம் சுத்தமாகும்; இதயம் பலமாகும்; உடல் நச்சுக்கள் முறியும்; ஈரல் பலமாகும்; சூடு குறைந்து உடல் வலுப்பெறும்.

-நல்ல சோறு
ஆனந்த விகடன்

#Credit : https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/1181008145291307/?type=3&theater

Tuesday 19 July 2016

கொய்யா பழத்தின் பலன்கள்!



குறைந்த விலையில் கிடைப்பதால், 'ஏழைகளின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தும். இதனால் குடலில் நச்சுக்கள் சேருவது தவிர்க்கப்பட்டு, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைகிறது.

100 கிராம் கொய்யாவில் 228 மி.கி வைட்டமின் சி உள்ளது.

இது ஒரு நாள் தேவையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். அதிக அளவில் வைட்டமின் சி எடுத்துக் கொள்வது, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதனால் நோய் கிருமித் தொற்று, சில வகையான புற்றுநோய்த் தாக்குதலில் இருந்து உடலைக் காக்கிறது. மேலும் ரத்தக் குழாய்கள், எலும்பு, தோல், உடல் உள் உறுப்புக்கள் போன்ற உறுப்புக்களின் அடிப்படைக் கட்டமைப்பு புரதமான கொலாஜன் சேர்க்கைக்கு அவசியமாக இருக்கிறது.

வைட்டமின் சி-யைத் தவிர வைட்டமின் ஏ-வும் இதில் நிறைவாக இருப்பதால், கண், தோல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவுகிறது. வாழைப் பழத்தைப்போலவே இதிலும் பொட்டாசியம் நிறைவாக உள்ளது. பொட்டாசியமானது செல்களின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்கும், இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் மிகவும் அவசியம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு மிகவும் பாதுகாப்பான உணவு. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக செயல் இழப்பு, இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

#Credit : https://www.facebook.com/vikatanweb/photos/a.190403194351812.47794.189960617729403/1179481272110661/?type=3&theater